Tuesday, February 10, 2009

'S L U M D O G M I L L IO N A I R E' / தாஜ்

நண்பரிடம் பகிர்தல்:
'S L U M D O G M I L L IO N A I R E'

----------------------------------------
- தாஜ்
*
அன்புடன்
ஆபிதீன்.....
*
மிகுந்த மனநிறைவுடன் எழுதுகிறேன்.
வாழ்வின் சந்தோசமோ.....
தொழிலின் வெற்றியோ....
இந்த மனநிறைவின் மையம் அல்ல.
அது என்றைக்கு வாய்த்தது?
சொல்லிக் கொள்ள?
இது வேறு...
வழக்க மாதிரியே
இன்னும் நம்மை....
சாகடித்துக் கொண்டிருக்கும்
கலையின் ஊடானது!
"சாவுதான் சந்தோஷமா?"
கேட்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
சொல்லிக் கொடுத்த வாத்தியார்
மாணவர்களிடம் கேட்பது மாதிரி!
*
கொஞ்ச நாட்களாய்
இல்லை... தப்பு....
மாதங்களாய்
வியாபாரம் என்ற பெயரில்
காரைக்காலில் கரைந்துக் கொண்டிருக்கிறேன்.
*
'நான் கடவுள்' இசைப்பற்றிய
செய்திகள் வெளிவந்தபோது....
நாக்குத் தொங்க அதை
அங்கே தேடித் திரிந்து
வாங்கிவந்து கேட்டால்...
இளைய ராஜா
தன் பெத்தப் பெயரையே
திரும்பத் திரும்ப
ஒரே நேர்கோணத்தில்
பதிவு செய்து
களைத்து வேறு தெரிகிறார்!
விளப்பரம் வெளிச்சம் போட்ட
அந்த ஆடியோ CDயை
தூக்கி வீச நினைத்தும்....
இன்னும் இல்லை.
அது படம் பார்த்தப் பிறகு
செய்ய வேண்டிய காரியமென
விட்டுவிட்ட போது....
*
ரஹ்மான்...
'Slumdog millionaire'க்காக'
கோல்டன் க்ளோப்'
பரிசு வாங்கிய செய்தி அடுத்து!
அதோடும் முடியவில்லை
அடுத்தடுத்த நாட்களில்....
இந்தப் படத்தின் இசைக்காக
நான்கு வெவ்வேறு தளத்தில்
ஆஸ்கர் பரிசுக்கும் பரிந்துரை!!!
'சரி அதையும் கேட்டுவிடலாம்' யென
அதே காரைக்காலில்
மீண்டும் இசைத் தேடல்....
*
Slumdog millionaire / இசை / ரஹ்மான்....
என்றெல்லாம் சொல்லி கேட்டது
அந்த ஆடியோ & வீடியோ
கடைக்கார்களுக்கு
புரிந்ததா என்றே தெரியவில்லை.
விழிகள் பிதுங்க
அவர்கள் கையசைத்தது
அப்படித்தான் இருந்தது!
மூன்றாம் நாள் விஜயத்தில்
ஒரு கடைக்காரன்.....
"சார் அந்தப் படத்தின் பாடல் இல்லை...
ஆனால், DVD இருக்கிறது!"
என்று சொல்லி
வெறும் இருபத்தி ஐந்துக்கு
மனதில் பால் வார்த்தான்!
*
கலைத்தாகத்திற்கான
அன்றைய செலவு போதாதென்று
பஸ்டாண்டில் வைத்து
'உயிர்மை' வாங்கியதில்...
'Mozart of Madras'
'அல்லா ரக்கா ரஹ்மான்' என்று
'Slumdog millionaire' பற்றி
தி கிரேட்... சாரு
'ரஹ்மானின் பிரதாபம்' செய்திருந்தார்.
விஸ்வநாதன் ராமமூர்த்தி
என்கிற ஆரம்ப பீடிகையோடு... தொடங்கி
ஆராதனா, ஆவோ ஜாவோ யென வளர்ந்து....
"இந்தப் படத்தைப் பற்றிச் சொல்ல
இன்னும் நிறைய இருக்கிறது.
ஆனால் படத்தைப் பார்த்த அடுத்த நாளே
இதை எழுதுவதால்
இப்போதைக்கு இவ்வளவு..." என்று
ஏழு பக்கத்திற்குப் பிறகும்
குறிப்புவேறு எழுதியிருந்தார்!
பஸ்ஸில் வைத்து
படித்து சுருட்டி விட்டதை
வீடு வந்து பிரிக்க மனமில்லை.
படம் இருக்க, காய் எதற்கு?
*
படத்தைப் பார்க்கலாம் என்றால்....
இரவு பதினென்னுக்குப் மேல்தான்
டி.வி. யின் பக்கமே போக முடியும்!
காலையில் தொடங்கும்
அதன் சீரியல் ஜால சங்கதி
அதுவரைக்கும் நீள்கிறது!
விடிய விடிய ராமாயணக் கூத்தும்
தோத்தது போங்கள்!
*
சீரியலைப் பார்த்து
நம் வீட்டுப் பெண்கள்
கண்களை கசக்குவதைக்
கண்டு பொறுக்காது...
மனிதாபிமானம் பொருட்டும்
ஆருதல் என்று சொல்லக்கூட
அருகில் போய்விட முடியாது!
(இந்தக் கொடுமைக்கு
மனித உரியை கமிஷனில் யாராவது
தீர்வு காணுங்கப்பா! தாங்கல.)
*
குடும்பத் தலைவர்களுக்கான
ஒதுக்கீட்டின் நேரத்தில்
அரைத் தூக்கத்தில் போய் அமர்ந்து
பாடத்தை ஓடவிட்டால்
எதிர் பாராத அளவில்
DVD யின் கிளாரிட்டி
என்னை அசத்தியது!
மறந்துகிறந்து...
மாஸ்டர் பிரிண்டை
தூக்கி கொடுத்து விட்டானோ!
ரஹ்மானுக்கு நன்றி சொன்னேன்.
*
பொதுவில் நாம் தேடிப் பார்க்கும்
கலைப் படங்களிலிருந்து
ஆஸ்கர் தேர்வு செய்யும்
கலைப்படம் என்பது
வித்தியாசமானப் பாதையில்
பயணப்படுவதாகவே இருக்கும்.
பல முறை அனுபவித்தாகிவிட்டது.
இசை ஓர் விதிவிலக்கிங்கு!
யார்த்தப் பின்னணி இசை
ஏங்கினாலும் கிட்டாது.
அதற்காக....
'killing fields'
'Rain Man'
படங்களின் பின்னணி இசையை
ரசிக்காமலா போனோம்?
*
பாடத்தைப் பார்க்க ஆரம்பித்ததுமே
மனம் படத்தோடு நெருங்கத் துவங்கியது.
ஆனாலும்...
பத்து நிமிடத்தில் காட்சியாகும்
ஒரு காட்சியைப் பார்க்க மட்டும்
மனம் முரண்டுப் பிடித்தது.
*
சிறுவர்களை கடத்திவந்து...
அவர்களிடம் ஆசை வார்த்தைகள் பேசி...
பிச்சை எடுக்க வைக்க
அவர்களின் கண்களை
கொதிக்கும் எண்ணெய் விட்டு
குருடாக்கும் அராஜகத்தை
கோணாமல் அரக்கர்களால்தான்
பார்க்க முடியும்!
ஹோம் தியோட்டரை
அணைத்துவிட்டு
படுக்கைக்குப் போய்விட்டேன்.
தூக்கம் வரவில்லை என்பது வேறு செய்தி.
'நாளைக்கு கடன்காரன் வரலாம்!'
*
மூன்று நாளைக்குப் பிறகு....
ஞாயிறு... இன்று!
சரியான முகுர்த்த நாள்!
தமிழீழத் தமிழர்களுக்காக
எங்கள் ஊரிலும்
ஒருவர் தீக்குளிப்பு!
காங்கிரஸ்காரர்!!!
இறந்து விட்டார்!
தலைவர்கள் எல்லாம் வருகை...
கட்டாய கடவடைப்பு கலாட்டா!
என் 'Tajwin' க்கு
ஏற்கனவே விடுமுறை!
பாஸ் டயோடோ டயேட்!
இடைப் பட்டப்பொழுதில்
நல்ல நேரம் பார்த்து
மீண்டும்...
'Slumdog millionaire'!
*
சிகிரெட்டைத் தவிர
என்னை, என் இருப்பை,
சுற்றி சுழலும் உலத்தை,
இஸ்டத்துக்கு
என்னில் சுதந்திரம் கொண்டு
வாழும் கஷ்டங்களையெல்லாம்
மறக்கடித்தபடி...
என்னை உள்வாங்கி
ஜீரணித்துக் கொண்டிருந்தது படம்!
விழுது விழுதாக கரைவது
எனக்கே தெரிகிறது!
வியந்தேன்...
வியந்தேன்... அளவேயில்லை!!
*
பம்பாயின்....
லெண்ட்ஸ்கேப்பை காட்டத் தொடங்கும்
அதன் ஆரம்பக் காட்சிகள்
விசேசமாகத் தெரிந்தது என்றால்.......
படத்தின் ஒவ்வொரு ப்ரேமுக்காகவும்
கேமிரா நிறுத்தப்பட்டிருக்கும் கோணம்
மனதில் கண்டு மலைத்துபோனேன்.
ஒவ்வொரு காட்சியும்
கவிதை...
V.T.ஸ்டேஷன்தான் அழகென்றால்
தாராவி சேரிகளுமா அப்படி?
சரி, அதுதான் போகட்டுமென்றால்...
பொது கழிப்பிடத்தையும் கூடவா
ஒரு கேமிரா கவிதையாக்கும்?
*
காட்சிகளை
'இன்ஞ்' சுத்தமாக
பிசிரே இல்லாமல்
வியூசுவலாக்கிய
படத்தின் எடிட்டிங்
இன்னொரு அழகு!
*
சாதாரண ஒரு கதையை...
இத்தனைத் தூரம் விறுவிறுப்பாக
சொல்ல முடியுமா?
சொல்லி இருக்கிறார்களே என்று
மனக் கண்ணைத் திறந்து
டைரக்டரின் பக்கம்
ஆச்சரியமாகப் பார்த்தேன்!
இந்தியா வந்து
இப்படி எல்லாம் இயக்கி
நம்ம இயக்குனர்களை
சுயம் உறுத்தவிட்டுவிட்டாரே!
Directer 'Danny Boyle!'
உறுத்துமா?
நம்மவர்களுக்கா?
நிஜமாகவா?
*
படம் தொடக்கம் தொட்டு
கேமராவுடன்
சிறகுகட்டிப் பறக்கும் இசை
படம் முடிந்தும்
கண்ணுக்கே தெரியாத
எழுத்துக்கள் ஓடி தீர்கிறவரை
காதினிக்க
மூக்கின்மேல்
விரல்வைக்கச் செய்கிறது!
அல்லா ரக்கா ரஹ்மான்!
'எங்கள் இந்தியா'வின்
இன்னொரு அதிசயம்தான்!
*
ஆஸ்கரில் இசைக்காகவும்...
பரிந்துரை செய்யப்பட்டிருக்கும்
இந்தப் படத்தின் இசையைப் பற்றி
இசை அறிந்த வித்தகரும்
ரஹ்மானின் இசையைத் தூக்கி
நிறுப்பவருமான
'ஷாஜி' சொல்வதை கொஞ்சம் கேட்போம்...
"ரஹ்மான் இதுவரை தந்திருப்பதிலேயே
மிகச் சிறந்த இசை என்று ஸ்லம் டாக் மில்லியனரை
சொல்ல முடியாது.
இந்தியர்களாகிய நாம், ரஹ்மான் திறமை
மிக நுணுக்கமாக வெளிப்பட்ட பல
திரைப்பாடல்களை கேட்டிருக்கிறோம்.
ஆனால்,முதல் முறையாக ரஹ்மானின் இசையைக் கேட்கும்
சர்வதேச சினிமா இசை ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களுக்கு
புதுப் புது ஒலிகளுடன் சினிமாவின் சித்தரிப்பில்
மிக நயமாக சங்கமிக்கும் ரஹ்மானின் இந்த இசை
அற்புதமாகத் தெரிவதில் ஆச்சரியமில்லை."
ஷாஜியின் இந்தக் கூற்றுபெருமளவில் துல்லியம் இல்லையா?
'Slumdog millionaire'ல் ரஹ்மான்
உயரத்தைத் தொட்டு இருந்தாலும்....
அவர் தொட்ட பல உயரங்கள்
நமக்குத் தெரியும்தானே!
*
இந்தப் படத்தில்... கதாநாயகி
'விலைமாதர்கள் வீட்டில் நடக்கும்
நடனத்தில் அறிமுகம் ஆகிறாள்.
ரஹ்மானின் இந்திய இசை
அந்தக் காட்சியில் தூக்கலாக எழுந்து
விரிந்து வசீகரம் செய்கிறது.
என்னுடைய... 'நாடகமே உலகம்' கதையில்
நாயகி சுகுணாவை நான்
அறிமுகம் செய்தபோதும்...
அப்படிதான் இசைக் குறிப்பு செய்திருந்தேன்!
நினைவில் அது எழுந்து
ரஹ்மானின் இசையோடு இன்னும்
இன்னும் நெருக்கமாகிப் போனேன்.
*
'Slumdog millionaire' படத்தின்
கதை மையம் போசும்
நுட்பம் பற்றி எழுத
தனியொரு ஆய்வு தேவையாக இருக்கும்!
அத்தனைக்கு கதையோட்டத்தில்
பின்னல் காணகிடக்கிறது.
*
மதகலவரத்தின் கோரம்/
பம்பாய் சேரிகளின் அநாதை குழந்தைகள்/
அவர்களின் சிதைவு/
சிதைவு கொண்டவர்களின் வாழ்வு/
சிதைவு கொண்டவர்களின் அன்பு/
சூப்பர் ஸ்டார்கள் மீதுகுழந்தைகள் கொள்ளும் மோகம்/
போலீசின் மாமுல் அராஜகம்/
பெரிய மனிதர்களின் கோணல் மனம்/
யதார்த்ததில் மதங்களை கடந்து
மனிதர்களை நேசிக்கும் பொருவாரியான மக்கள்/
மதங்களை கடந்து துணையைத் தேடும் உள்ளங்கள்/
கற்பு சிதைவுக்குப் பின்னும் தேடியடையும் நிஜக்காதல்/
சமூக அவலங்களைச் சொல்ல
கையில் எடுத்துக் கொண்டிருக்கும்
டி.வி.யின் மில்லியனர் நிகழ்ச்சியின் நேர்த்தி/
படத்தின் இறுதியில்
கதாநாயகனின் நண்பனால் சொல்லப்படும்...
'God is Great' என்கிற
மூன்றே மூன்று வார்த்தைகள்
படத்தை, தெடக்கம் தெட்டே
காட்சி காட்சியாக திரும்ப
யோசிக்க வைத்துவிடும் படம்!
இந்தப் படத்தின்
திரைக்கதையில்தான்
எத்தனையெத்தனை அழகுப் பின்னல்கள்!
*
நம்ம ஊர்...
'வியாபாரப் படம் எடுக்கிறேன் பேர்வளிகள்'
இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்.
கட்டாயமாக.
அதற்கு முன்னால்....
தங்களது படங்களை
வெவித்தெடுத்த இயக்குனர் தனத்திற்காக
கக்கூசில் உட்காரும் போதாகிலும்...
பாவமன்னிப்பு தேடிவிட்டு
படத்தைப் பார்க்கச் செல்வது
நேர்மையாக இருக்கும்.
*
தொடர்ந்து....
அந்தப் படத்தில்
சிறுவர்கள் நடித்திருக்கும்...
அவர்களின் முதல் நடிப்பும் கூட
என்னை வியப்பில் ஆழ்த்தியது.
மிகுந்த மன நிறைவில் நான்...
திக்குக்காடிப் போனபோது
அந்த பளூவை
உங்களுக்கு கடிதத்தில்
இறக்கிவைத்தால்
தேவலாமென தோனிய நாழிக்கு....
*
அப்பாடா....!!
ஆனது!
*
- தாஜ்Feb - 08/2009
satajdeen@gmail.com

2 comments:

Anonymous said...

அன்புள்ள தாஜ், திரைப்படம் பற்றிய உங்கள் பதிவு ஆபிதீனுக்கான கடிதம் என்றாலும் பொதுவில் வைத்ததால் நானும் படித்து மகிழ முடிந்தது. ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கார்கள் கிடைத்த விஷயம் இந்நேரம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அது பற்றி நான் எழுதிய பதிவையும் www.nagorerumi.com ல் பார்க்கவும். அன்புடன்
நாகூர் ரூமி

T.A.Abdul Hameed Educational Trust said...

அன்புடன்
ரஃபி...

உங்கள் வரிகள்
எப்பவும்.....
எனக்கு மகிழ்வை தரக்கூடியது.
உங்களது
பதிவைப் பார்த்தேன்.
மெயில் எழுதுகிறேன்.
நன்றி!
- தாஜ்