Monday, July 17, 2006

கல்வி கண் திறந்த காமராஜ் பேசுகிறார்...

'தமிழகம் கண்ட நிஜமான
அரசியல் தலைவர்களில்
ஒருவராக கருதப்படும்
திரு. காமராஜ் அவர்களின் 104 -வது
பிறந்த தினத்தை நினைவுகூறும் முகமாக...'
- தாஜ்...

"எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று பேசவும் ஆரம்பித்திருக்கின்றார்கள். யார் பேசுகின்றார்கள்என்று தெரியுமா? இதை கூர்ந்து கவனிக்க வேண்டும்.

கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு ஏழை மக்களை மேலும் ஏழையாக்குபவர்களே இதை கூறுகின்றார்கள். நீ ஏழையாய் இருப்பது, ஏழையாய் இருக்க வேண்டும் என்பது உன் தலை எழுத்து ( கடவுள் கட்டளை )என்று கூறி ஏமாற்றுகின்றார்கள். தங்களின் நிலையை உயர்த்திக் கொண்டே இருக்கும் சூழ்ச்சியே அது.

உழைக்கவேண்டியதே, ஏழையாய் இருப்பதே தலையெழுத்து என்றால் அந்த தலையெழுத்தை மாற்றிஎழுதுவோம். எழுத வேண்டியது அவசியம் என்றுதான் சொல்லுகின்றேன். எனவே கடவுள் பெயரைச் சொல்லி உங்களை ஏமாற்றுகின்றவர்கள்தான் என்னை கடவுள் நம்பிக்கையில்லாவன் என்று சொல்லுகின்றார்கள். இப்படிப்பட்டவர்களோடு திமுகவும் இப்போது சேர்ந்து கொண்டிருப்பதுதான் விந்தையாக உள்ளது.( சிரிப்பு)

ரஷியாவிலும் அமெரிக்காவிலும் செல்வம் செழித்து வருகிறது. அங்கு இவை எல்லாம் குறுக்கிடவில்லை. அந்த நாடுகளைப் போன்று நம்முடை நாட்டிலும் செல்வம் பெருக வேண்டுமானால் கடவுள் நம்பிக்கை இருந்தால் மட்டும் போதாது. அதற்காக பாடுபடவேண்டும். அதிகம் உழைக்கவேண்டும். சோம்பேறித் தனமாக இருந்தால் பயன் படாது. கடவுளை எண்ணிக் கொண்டு கைகட்டிக் கொண்டிருந்தால் எப்படிச் சாப்பிடுவது?"
காமராஜ்உரை/இராயக்கோட்டை/26.04.1966

"அவனவன் தலை எழுத்துப்படி நடக்கட்டும் என்பதுதான் சுகந்திராக் கட்சியின் தத்துவமாக உள்ளது. எவன் தலையில் எவன் எழுதினான் என்று சொல்லட்டுமே!! தலை எழுத்து என்று ஒன்று உண்டென்றால் அதை மாற்றியே ஆகவேண்டும். இதற்காகவே சண்டை போடுகிறேன்."
காமராஜ் உரை/பழைய மாம்பழம்/13.04.1961

"அன்று பள்ளிகளை மூடினார் ராஜாஜி. நான்தான் கங்கிரசிலிருந்து போகச் சொன்னேன். அந்த கோபம்அவருக்கு இன்னும் தீரவில்லை. 53 -ல் செய்ய முடியாததை, எல்லாப் பள்ளிகளையும் மூட முடியாமற்போனதைஇப்போது செய்யப் பார்க்கிறார். அதுவும் திமுக வைக் கொண்டு செய்துவிட நினைத்துச் சூழ்ச்சி செய்கின்றார்.
இந்த சூழ்ச்சி என்னிடம் பலிக்காது. மக்கள் அறிவற்றவர்களாகவே இருக்கவேண்டும் என்பது அவர் தர்மம். தாம், தர்மத்தைக் காப்பதாக ராஜாஜி சொல்லிக்கொண்டிருக்கிறார். இவர் இல்லை என்றால் தர்மமே இல்லாமல்போய்விடுமா? இவர் தர்மம்தான் என்ன? 1953-ல்தான் பார்த்தோமே! குலக்கல்வித் திட்டத்தின் மூலம் பள்ளிகளைமூட முயற்சித்தார். அந்த முயற்சியில் தோல்வி கண்டார். இப்பொழுது திமுகவின் உதவி கொண்டு நிறைவேற்ற எண்ணுகிறார். ராஜாஜியைப் பற்றி எனக்குத் தெரியும். அவர் சதி இனி ஒன்றும் பலிக்காது. நான் இருக்கும் வரை அதைப் பலிக்க விடமாட்டேன். பயப்படவும் மாட்டேன். ஏழை ஏழையாகவே இருக்கவேண்டும் என்று அவர் கூறுகிறார்.அவரது தர்மம் அப்படிச் சொல்கிறது. அதை மாற்றியே தீருவேன். தனி ஒருவனாக நிற்க வேண்டி வந்தாலும் அதைமாற்றியே தீருவேன்."
காமராஜ் உரை/வாணியம்பாடி/04.05.1966

"உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடுகளை இந்த நாட்டில் நீண்ட காலமாக இருந்து கொண்டு, மக்களை மடமையில் ஆழ்த்தி வருகின்றன. இந்த நாட்டிலே உயர்ந்த சாதி என்பவன் அயோக்கியனாய், திருடனாய், சோம்பேறியாய் இருந்தாலும் அவன் உயர்ந்த சாதியில் பிறந்தவன் என்பதற்காக உத்தமன் ஆகிவிடுகின்றான். உதாரணமாக பாரதத்தில் வரும் தர்மன் ஆட்சியை, தன் உடன்பிறப்பை, தன் மனைவியை, ஏன் தன்னையே அடகு வைத்துப்பகடையாடினான். அவனை நம் நாடு தர்மவான் எனப் போற்றுகிறது. உயர்ந்த குலத்தில் பிறந்தவன் என்பதற்காகச் சமுதாயக் குற்றச் சாட்டுகளிலிருந்து தப்பித்துக் கொள்கின்றான். ஆனால் தாழ்ந்த குலத்தில் பிறந்த ஒருவன் நாணயப் பொறுப்புள்ளவனாக இருந்தாலும் இனப் பாகுபாடு அவனை முன்னுக்கு வராமல் தடுக்கிறது. இப்பிளவைப் போக்கிஅனைவரும் சமம் என்ற ரீதியிலே மக்களை மக்களாக நடத்துவதுதான் சமதர்மம்."
காமராஜ் உரை/கிருஷ்ணகிரி/12.01.1967
*
நன்றி: உண்மை, ஜூலை 1-15, 2006
தகவல்/தட்டச்சு: தாஜ்

satajdeen@gmail.com

1 comment:

ENNAR said...

பெருந்தலைவரின் பெருமையை எடுத்தெழுய தங்கள் பணிக்கு சிறப்பு வாழ்த்துக்கள் நன்றியும் கூட