Saturday, April 19, 2008

தாஜ் கவிதைகள் - 26


தந்தையின் காலம்.
------------------------------
- தாஜ்
*
என் பிள்ளைகள்
படிக்கிறார்கள்
சுமக்க இயலா
சுமக்கவே படிக்கிறார்கள்.
*
வீட்டில் யென்
அசைவுகளிலும்
பார்வை அகலா
சிரத்தையோடே
படிக்கிறார்கள்.
*
மண்ணில் பாதம்
பதியும் இதம் வேண்டி
காலணிகளை
விட்டுச் செல்ல
படிப்பால்
தெளிகிறார்கள்.
*
குறுக்கீடுத் தவிர்க்க
சப்தமற
காலடிகளை அளந்து
பாதை ஒற்றியே
நடக்க வேண்டியிருக்கிறது.
*
என் உடுப்புகளில்
கறைபட்ட எச்சங்கள்
இன்னும் அவர்களுக்குப்
புலப்படாதது ஆச்சரியம்.
*
அவர்களது புத்தகக்
குவியலுக்குப் பக்கத்தில்
நான் நகலெடுத்த
என் கவிதைப் பக்கங்கள்
விரிந்து கிடக்கிறது
இன்னொரு படிப்பாக.
*
காலம் காலமாக
எல்லோரும்
கவிதைகளை
விரும்புவதில்லை
சந்தோஷமாக இருக்கிறது.
******

No comments: