Sunday, July 23, 2006

நான் - பெரியார் / குடியரசு / 17.05.1931

மனிதன் தன்னை 'நான்' என்று சொல்லிக்கொள்வது எதனால், அது எது என்னும் ஆராய்ச்சியானது, இந்து மதம் என்பதின் கடைசி 'வேதாந்த' தத்துவமாகப் பாவிக்கப்பட்டு, 'அதைக் கண்டுபிடிப்பதே' கடவுளைக் கண்டுபிடிப்பதாகும் என்று சொல்லப்பட்டு வருகின்றது.

உதாரணமாக, தன்னை அறிந்தவனே கடவுளை அறிந்தவனாவான், தன்னைத் தான் அறிந்தால் கடவுளை அறியவேண்டியதில்லை, தன்னை அறிந்தவனே ஞானி என்றல்லாம் சொல்லப்படுவதைநாம் கேட்டிருக்கிறோம்.

ஒரு மனிதன் தன்னை 'நான்' என்று சொல்லிக் கொள்கின்ற அர்த்த பாவம் எது என்று கண்டுபிடிக்கும் விஷயத்தில் ஏதோ ஒரு பெரிய கஷ்டம் இருப்பதாக நினைத்தோ, அது சுலபத்தில் மனத்துக்கு எட்டாதது என்று கருதியோ அவர்கள் இப்படிச் சொல்லி இருக்கக்கூடும். 'நான்' என்பதை என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து ஒருவன் அதைக் கண்டுபிடித்து விட்டானேயானால் பிறகு அவன் ஞானியாகவும், துறவியாகவும் அல்லது கடவுளைப் பற்றிக் கவலைப்பட வேண்டியவனல்லாத.... இலட்சியம் செய்யப்பட வேண்டியவனல்லாத.... நாத்திகனாகவும் ஆகிவிடக் கூடும் என்று கருதிச் சொன்னதாகவும் முடிவு செய்து கொள்ள வோண்டியிருக்கின்றது.

எப்படி இருந்தாலும் ஒரு மனிதன், தான் யார்? தனக்குள் இருக்கும் 'நான்' 'என்' என்று வரும் உணர்ச்சி எது? அது எப்படி உண்டாகின்றது? எதுவரையில் அவ்வுணர்ச்சி இருக்கின்றது? என்பதான உண்மையை உணர்ந்தால், அவன் நாத்திக அபிப்பிராயத்தை அதாவது ஆத்மாவோ கடவுளோ இருக்கின்றது என்பதை நம்பாத கொள்கையையே கொள்ள வேண்டியவனாகி விடுவான் என்று சொல்லப்படுவதில் உண்மை உண்டு என்பதை ஒப்புக்கொள்கின்றோம்.

உலகத்தில் பெயரும் உருவமும் உள்ள பொருள்கள் எல்லாம் ஒருவித சேர்க்கையால் அதாவது பல கூட்டுப் பொருள்களால் சேர்ந்து இருக்கும் வடிவத்தையே பெரிதும் உணர்த்துவதாகும்.

உலகத்தில் உள்ள எந்தப் பெயர் கொண்ட வஸ்துவிற்கும் மாறுதல் அடையாத தனித் தன்மை என்பது கிடையவே கிடையாது. எந்த பெயரும் ஒரு தோற்றத்திற்கு அதாவது வடிவத்திற்கு சொல்லப்பட்டு வருகின்றதே அல்லாமல் வஸ்துவுக்குப் பெயர் சொல்லப்படுவதில்லை.

ஒரு லாந்தர், ஒரு மேஜை, ஒரு கடிகாரம், ஒரு புத்தகம், என்பது போன்ற வஸ்துகளில் ஏதாவது ஒன்றை எடுத்து அதன் பெயர் என்ன என்று ஒருவனை கேட்டால், அதன் பெயரை சொல்வான். ஒரு லாந்தர் எது என்றுதொட்டுக்காட்டச் சொன்னால்... லாந்தர் என்பதில் அவன் தொட்டுக் காட்டியப் பாகம் ஒரு சிம்ணியையோ, கண்ணாடியையோ, தகட்டையோ, கம்பியையோ, ஆணியையோதான் தொட்டுக் காட்டுவதாய் இருக்கும். அது போலவே, ஒருமேஜையைத் தொட்டுக் காட்டச் சொன்னால் தொட்டுக் காட்டிய பாகம் ஒரு பலகையோ, அல்லது காலையோ, ஆணியையோ, குமிழையோ,கைப்பிடியையோதான் தொட்டுக் காட்டியதாகக் காண்போம். இப்படியேதான் கடிகாரம், புத்தகம்ஆகிய பொருள்களிலும் ஒரு பாகத்தையே தொடமுடியும்.

அவன் லாந்தர் என்பதாக காட்டியது கம்பி என்பதானாலும், கம்பி என்பதாக ஒன்றைத் தொட்டுக் காட்டியதாக இல்லாமல் இரும்பைத் தொட்டுக் காட்டியதாகத் தான் காணப்படும். இரும்பு என்பதைக் காட்டும் போது, ஏதோஒரு வகையான மண்ணின் சேர்க்கையைக் காட்டியதாகத்தான் முடியும்.

பெயருக்கு வஸ்துகள் கட்டுப்பட்டு, அந்த வஸ்துகள் வேறு எந்த ரூபத்தை கொண்டிருந்தாலும் வேறு குணத்தை அடைந்தாலும், அந்த பெயரையே உடையதாகக் காணப்படமுடியாது என்பதாக இவற்றிலிருந்து நன்றாய்உணரக் கிடக்கின்றது.

ஆகவே லாந்தர், மேசை, கடிகாரம், புத்தகம் என்றதும் ஒருவித வடிவத்தில் காணப்படும் ஒரு தோற்றத்தின் பெயரே தவிர ஒரு வஸ்துவின் பெயர் அல்ல.

மேசை, நாற்காலி, பெஞ்சு, ஊஞ்சல் என்று சொல்லப்படுவதான வஸ்துக்கள் மரம் என்னும் ஒரே மூலப்பொருளாலும், இரும்பு என்னும் ஒரே உபமூலப் பொருளாலும் செய்யப்பட்டிருந்தாலும் தனித்தனி வடிவத் தோற்றத்தினால் தனித்தனி பெயரை உடையதாகி இருக்கிறது. உலக வஸ்துக்கள் எல்லாம் வடிவம், உருவம், சாயல், குணம், நிலை முதலாகிய பேதத்தால் பலவிதப் பெயர்களை உடையதாக இருந்தாலும், பலப்பல காரணங்களால் அதே வஸ்துகள்வேறு பல பெயர்களை அடைந்தாலும், முடிவில் அவற்றின் மூலப் பொருட்களின் பெயர் எல்லாவற்றிற்கும் ஒரே தாதுபெயருடைய வஸ்துவாகவேதான் இருக்கும்!

இது போலவேதான், ஜீவன்கள் என்கின்ற 'உயிர்'ப் பிராணிகள் எல்லாம்கூட உருவத்தில், தோற்றத்தில்வேறுவேறு வகையாய் பெயராய்ச் சொல்லப்பட்டாலும் அவற்றின் மூலப்பொருள்களும் ஒன்றேயாகும். மரத்தையேமூலப் பொருளாய்க் கொண்ட மேஜை, நாற்காலி, பெஞ்சு, முதலிய பல பெயர்களுக்கு உருவம், தோற்றம் ஆகியவையே காரணமாய் இருப்பது போல, அணுக்கிருமி, பூச்சி, புழு, பட்சி, மிருகம், குரங்கு, மனிதன் முதலாகிய பல ஐந்துக்களுக்கும் உருவம், தோற்றம், குணம் முதலிய காரணமாய்ப் பல பெயர்கள் சொல்லப்பட்டாலும், தொட்டுக்காட்டும் பாகங்களானவை எல்லா ஜீவ வர்க்கத்துக்கும் ஒரே மாதிரியான, ஒரே பெயர் கொண்டதான மூலப்பொருளாகத்தான் இருக்கும். ஆகவே, ஜீவ வர்க்கங்கள் என்பனவாகிய சகல ஜீவப்பிராணிகளும் சாயல், உருவம், தோற்றம், குணம் முதலியவை தவிர அவற்றின் மூலப்பொருள்களும் தத்துவமும் ஒன்றேயாகும்.

எத்தனையோ கோடி ஜீவப்பிராணிகள் என்பதில் மனிதன் என்பதும் ஒருவிதமான தோற்றமுடைய உருவத்திற்குச் சொல்லப்படும் பெயரேயொழிய மனிதன் என்கின்ற ஒரு தத்துவத் தனிப்பொருள் இல்லை என்பதைஇதனால் ஒருவாறு உணரலாம். ஏனெனில், மனிதன் என்று குறிப்பிடுவதற்குத் தொட்டுக்காட்டக்கூடிய ஒரு வஸ்து மனித சரீரத்தின் எந்தப் பக்கத்திலும் கிடையாது.

ஒரு மனித உருவத்தைக் காட்டி, அவனை மற்ற ஒரு மனிதனால் தொட்டுக் காட்டச் சொன்னால், அவன்ஒரு மனிதன் என்பவனின் சரீரத்தில் ஏதாவது ஓர் அவயத்தைத்தான் தொட்டுக் காட்டுவான். அந்த அவையத்திற்கு ஏற்கனவே கை, கால், வயிறு, முதுகு, மார்பு, என்பதாக ஏதாவது பெயருடையதாக இருக்கும். அந்த பெயருடைய அவைய வஸ்துவையும் கவனித்துப் பார்க்க ஆரம்பித்தால்.... அது தசை, தோல், முதலாகிய பெயர்களையுடைய பொருளாகத்தான் காணப்படும். இப்படி எல்லாம் இருந்தாலும்கூட, அப்படிக் காட்டப்பட்ட மனிதனும் இயங்குதல் அதாவது, அசைகிற சக்தி இருக்கும்போதுதான் அந்த தோற்றத்திற்கு மனிதன் என்கின்ற பெயரையுடையதாகவும், அசைகின்ற சக்தி இல்லாது போய்விட்டால் மனிதன் என்ற பெயருடைய அதே தோற்றம் பிணம் என்னும் பெயருடையதாகவும் ஆகிறது.

***
- சிறிய சில நீக்கங்களுடன்/தட்டச்சு/தகவல்: தாஜ்.

- நன்றி: உண்மை/ஜூலை 1 - 15, 2006

satajdeen@gmail.com

1 comment:

ROSAVASANTH said...

பெரியார் எழுதிய 'ஆத்மாவை பற்றி ஒரு ஆராய்ச்சி' என்ற கட்டுரையுடன் இந்த கட்டுரை சேர்ந்து வாசிக்க தக்கது.

படிக்க தந்ததற்கு நன்றி.