Tuesday, May 05, 2009

இது அரசியல்வாதிகளின் நாடு!


*
அரசியல்வாதிகளின் முகத்தில் எழுத்தால் அறைகிற ஓர் அழுத்தமான கட்டுரைஅடுத்தப் பக்கத்திலிருக்கிறது. இனி இது படித்து அரசியல்வாதிகள் தங்களது முகங்களை கவட்டியில்... நுழைத்துக் கொள்ளட்டும்.
*
அல்லதுபோனால்..... அந்த எழுத்தாளர் இன்னொரு கட்டுரை எழுதி அவர்களை எரிக்க ஆரம்பித்துவிடலாம்.கட்டுரையின் மூலம் அந்த எழுத்தாளரை இனி கவிதாசன் என்று அழைப்பது விடுத்துகட்டுரைதாசன் என்று அழைக்க ஆரம் பிக்கலாம்.
*
- ஹாஜா அலி
(தமிழ்ப் பூக்கள்/பிப்ரவரி -1982)
***
தேர்தல் ஸ்பெஷல்:
இது அரசியல்வாதிகளின் நாடு!
-----------------------------------------
- கவிதாசன்
*
ஏக இந்திய
அரசியல்வாதிகளின் சார்பில்
சொல்கிறேன்....
"வெள்ளை என்பது வடிகிற இரத்தத்தின் நிறம்...
கருப்பு என்பது துளிர்கிற இலையின் நிறம்...
மஞ்சள் என்பது அடுப்புக்கரியின் நிறம்...
சிகப்பு என்பது கடல் ஜலத்தின் நிறம்...
பச்சை என்பது பசும் பாலின் நிறம்...
என்ன சரிதானே?"
*
"ஆமாம்... ஆமாம்...
சரிதான்... சரிதான்...
இங்கே இருக்கிற அத்தனை
மக்களும் சொல்கிறோம்...
அத்தனையும் சரிதான்!
நீங்களே எங்கள் தலைவர்...
நீங்களே எங்களின் வழிகாட்டி...
நீங்களே...
இந்த தேசத்தை உயிர்ப்பிக்க வந்தவர்கள்...!!"
**
"இல்லை....."
*
"ஏன்....?"
*
"நீங்கள் சொன்னது அத்தனையும் தப்பு!"
*
"யார்... நீ....?"
*
"அரசியல் அற்றவன்...அரசியல் கட்சிகளில் சேராதவன்!"
*
"ஓ.... அந்த மைனாரிட்டிக் கூட்டத்தைச் சேர்ந்தவனா....?
வழித்தவறி வந்துவிட்டாயா...?
இங்கே உன்னை மாதிரி
அதிகப் பிரசங்கிகளுக்கெல்லாம்
இடமில்லை...!!
இது அரசியல்வாதிகளின் நாடு!
நீ போகலாம்."
*
"எங்கே போவது...?"
*
"எங்கேயாவது!
உங்களுக்கு தஞ்சம் தரத்தான்....
பிழைகத்தெரியாதக் கூட்டம் இருக்கிறதே!
சில பத்திரிகைகள் இருக்கிறதே!
இல்லை என்றால்....
நாங்கள் கட்டிவைத்திருக்கிற
பைத்தியக்கார விடுதிகள்
ஏராளமாக இருக்கிறதே...!"
*
"நான் மக்களைக் கேட்கிறேன்...."
*
"தாராளமாக....
மக்களே....
என் உடன் பிறப்புகளே...
இரத்தத்தின் ரத்தங்கமே..
பிள்ளைகளே...
நீங்களே இவனுக்கு...
பதில் சொல்லுங்கள்!"
*
"கிருக்கனே....
எங்களின் விசுவாசத்தை
மாசுப்படுத்தி விடாதே...
எங்களை எங்களாகவே
இருக்கவிடு...
திரும்பிப்போ.....!"
*
"மக்களே....
அந்தப் பைத்தியக்காரனை
மன்னியுங்கள்.
நான்...
அரசியல்வாதி சொல்கிறேன்...
அதிகாரத்தின் பிரதிநிதி சொல்கிறேன்...
ஆளும் - ஆளப்போகிற
வர்க்கத்தின் சார்பில் சொல்கிறேன்...
எங்கே... சொல்லுங்கள்....
வெள்ளை என்பது வடிகிற இரத்தத்தின் நிறம்...!"
*
"வெள்ளை என்பது
வடிகிற இரத்தத்தின் நிறம்...!"
-----------------------------------------
பின் குறிப்பு:
*
என்பதுகளின் தொடக்கத்தில் செளதிக்கு சாம்பாத்தியம் என்று போன போது.... 1981-82களில் அங்கே நான் ஈடுபாடோடு நடத்திய மாதாந்திர சிற்றிதழ்தான் 'தமிழ்ப் பூக்கள்'!
*
சம்பாதிக்கப் போன இடத்தில், அதை வழிமுறையாய் பாழடித்துக்கொள்ள ஏதே னும் வேண்டாமா என்ன? அதனாலும்தான் தமிழ்ப் பூக்கள்!
*
இப்பொழுது கூட அதே பெயரில் பிளாக் வைத்திருக்கிறேன்! தவறி உருப்பட்டு விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பதும் பெரிய விசயம் தான்.
*
வானம்பாடி/ கரிகாலன்/ மணிமுடி/ கவிதாசன்/ என்பதான பல புனைப் பெயரி லும்,எனது சொந்தப் பெயரிலும் அதில் என்னென்னமோ எழுதினேன். இத்த னைப் பெயர்களில் அதில் எழுதுவதற்கு அவசியமும் இருந்தது. தலையங்கம்/ கதை/ கட்டுரை/ கவிதை/ கேள்வி பதில்/எல்லாவற்றையும் நானே எழுத நேர்ந்ததால் அத்தனைப் புனைப் பெயர்கள்அவசியமாகிப் போனது. இன்னும் சில புனைப் பெயர்கள் கூட விடுப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன்! ஞாபகம் இல்லை. ஆக, இந்த கவிதாசன் நான்தான்!
*
இந்தப் பின் குறிப்பு எழுத நினைத்ததே 'ஹாஜா அலி'க்காகத்தான்! நான் சகஜம் பாராட்டியமனிதர்களில் அவரும் ஒருவர். சௌதியில் நான் தமிழ்ப் பூக்கள் நடத்தியபோது எனக்கு சில நண்பர்கள் மிகுந்த பக்கத்துணையாக இருந்து உதவினார்கள். அவர்களில் ஹாஜா அலியும் ஒருவர். இலக்கிய ப்ரியத்தில்/ அதனோடான அணுகலில் எனக்கும் முந்தியக் காலகட்டத்தைச் சேர்ந்தவர். வித்தியாசமானவர்! இங்கே நான் வித்தியாசமென குறிப்பிட்டிருப் பது சாதாரண தெனித்தரும் அர்த்தத்தில் அல்ல! வித்தியாசம் என்றால் மஹா வித்தியாசம்!
*
இப்பொழுது அவர் இல்லை! அவரே கூப்பிட்டு சாவை அணைத்துக் கொண் டார்! மிகுந்த கவிதை நயத்தோடு!அவரோடு பழகிய பல நண்பர்கள் அவரை பைத்தியம் என்பார்கள்! எனக்கு அந்த அளவுக்கு பார்வை இல்லாமல் போய் விட்டது. அப்படி நான் சட்டென சொல்லிவிட முடியாது.ஹாஜா அலி மாதிரி எனக்கு பல இலக்கிய நண்பர்கள் உண்டு. வெவ்வேறு கோணத்தில் அவர்க ளும் எனக்கு வித்தியாசமானவர்களாகத்தான் தெரிகிறார்கள். எல்லோரையும் நான் அப்படி கணித்துவிட முடியாது.என்னை யாராவது பைத்தியம் என்றால்... அவரை நமஸ்கரித்து எழுதி வாங்கி ஃபிரேம் போட்டும் வைத்துக் கொள்வேன்.
*
எழுதனும். ஹாஜா அலியைப் பற்றி நிறையவே எழுதனும்! அத்தனைக்கு செய்திகளும் உண்டு! இலக்கியம் சார்ந்தும்/ இலக்கியம் சாராமலும் என்று ஒருபாடு செய்திகள் உண்டு!!
*
நான் மேலே குறிப்பிட்டுள்ள சிற்றிதழான தமிழ்ப் பூக்களின் ஆறாவது இதழை(பிப்ரவரி-1982)அவர் பொறுப்பேற்று செய்து தந்தார். அதில் பிரசுரமான/ நான் எழுதிய/ 'இது அரசியல்வாதிகளின் நாடு...!' கட்டுரைக்கு அவர் முன் குறிப்பும் செய்திருந்தார்.அந்தப் பழையக் கட்டுரையை இந்த தேர்தல் கால கூத்தை யொட்டி பிரசுரத்திற்குதூசு தட்டி கொண்டுவந்திருக்கிறேன். ஹாஜா அலியின் முன் குறிப்பையும் விடாது இணைத்ததில் மகிழ்வுண்டு! நெகிழ்ச்சியான மகிழ்வு!
- தாஜ்
****
கீழே புகைப்படம்: ஹாஜா அலி.
****

No comments: